Total Pageviews

Thursday, October 28, 2010

முள்ளம்பன்றி குட்டி கதை

முள்ளம்பன்றி குட்டி கதை - சிறுவர் கதை

ஒரு  காட்டில் ஒரு தாய் முள்ளம்பன்றியும் அதன் குட்டியும் வசித்து வந்தன.  குட்டி முள்ளம்பன்றி மிகவும் துருதுருவென இருக்கும்.  அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கும்.  ஒரு நாள் அது காட்டில் உள்ள மற்ற விலங்கு குட்டிகளுடன் விளையாட சென்றது.  மற்ற விலங்கு குட்டிகள் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தன.  முள்ளம்பன்றி குட்டி அங்கே சென்று "என்னையும் விளையாட சேர்த்துக் கொள்ளுங்கள்" என்று வேண்டியது. மற்ற குட்டிகளும் அதை விளையாட சேர்த்துக் கொண்டன.   எல்லா விலங்கு குட்டிகளும் ஓடி பிடித்து விளையாடிக்  கொண்டு இருந்தன.    முள்ளம் பன்றி குட்டி ஓடி பிடித்து விளையாடும் போது அதன் முட்கள் மற்ற குட்டிகள் மீது குத்தியது.  இதனால் மற்ற குட்டிகள் முள்ளம் பன்றி குட்டியிடம் "உன்னுடைய முட்கள் எங்கள் மேல் குத்துகிறது.  அதனால் எங்களுடன் விளையாட வேண்டாம்." என்று கூறின.  அதற்கு முள்ளம் பன்றி குட்டி "நான் உங்கள் மேல் குத்தாமல் விளையாடுகிறேன்.  என்னை விளையாட்டிலிருந்து நீக்க வேண்டாம்"  என்று கேட்டது.  ஆனாலும் மற்ற குட்டிகள் அதற்கு சம்மதிக்கவில்லை.  இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றி குட்டி சோகமாக வீடு திரும்பியது. அம்மாவிடம் வந்து அழுதது.  அது தன் அம்மாவிடம் "அம்மா எனக்கு இந்த முட்கள் வேண்டாம்.  எல்லாவற்றையும் வெட்டி விடு" என்று கூறியது.  அதற்கு அதன் அம்மா "நீ அப்படி சொல்ல கூடாது.  இயற்கையில் கிடைத்துள்ள அந்த முட்கள்தான் நமக்கு அழகு.  நம்மை எதிரிகள் யாராவது தாக்க  வந்தால் நாம் அந்த முட்களால் அவர்களை குத்தி தப்பித்து கொள்ளலாம்" என்றது. 
ஆனால் குட்டி அதை காது கொடுத்து கேட்கவில்லை.  "அதெல்லாம் கிடையாது. எனக்கு இப்போதே எனது முட்களை வெட்டி விடு" என்று அடம் பிடித்தது. 
அதற்கு அதன் அம்மா "நான் அந்த முட்களை வெட்டி விட்டு விடுவேன்.  ஆனால் திரும்பி வேண்டுமென்றால் பிறகு உடனடியாக கிடைக்காது" என்றது.
"அதனால் பரவாயில்லை" என்றது குட்டி.
தாயும் தன் குட்டியின் ஆசை படியே அதன் முட்களை வெட்டி விட்டது.
முட்களை கத்தியால் சரித்து விட்ட பின் முள்ளம் பன்றி குட்டி மொழு மொழுவென இருந்தது.  உடனே முள்ளம் பன்றி குட்டி மீண்டும் தனது நண்பர்களுடன் விளையாட சென்றது.   மொழு மொழுவென இருந்த முள்ளம் பன்றி குட்டியை பார்த்தவுடன் எல்லா குட்டிகளும் கொல்லென சிரித்து விட்டன.  உடனே கோபம் கொண்ட முள்ளம் பன்றி குட்டி "நீங்கள் எல்லாரும் குத்துகிறது என்று சொன்னதால்தான் நான் என் அம்மாவிடம் சொல்லி முட்களை வெட்டி கொண்டு வந்திருக்கிறேன்.  நீங்கள் அனைவரும் இப்படி சிரித்தால் எனக்கு கோபம் வரும்" என்று கூறியது. 
உடனே மற்ற குட்டிகள் "சேச்சே, அப்படியெல்லாம் இல்லை.  இப்போது நீ மிகவும் அழகாக இருக்கிறாய்" என்று கூறி சிரித்துக் கொண்டன. "உன்னை நாங்கள் மறுபடியம் விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறோம்." என்று கூறின.
முள்ளம் பன்றி குட்டி மொழு மொழுவென இருந்ததால் எல்லா குட்டிகளும் அதை தொட்டு தொட்டு பார்த்தன. பிறகு ஒரு குரங்கு குட்டி அதை கிள்ளி, கிண்டல் செய்தது.  மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றி குட்டி, குரங்கு குட்டியுடன் சண்டைக்கு சென்றது. இப்படியாக சண்டை அதிகரித்தது. 
இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த முள்ளம் பன்றி குட்டி, மீண்டும்  சோகமாக  வீடு  திரும்பியது.
அதைப் பார்த்த தாய் முள்ளம் பன்றி, குட்டியை பார்த்து "ஏன் மிகவும் சோகமாக வீடு திரும்பி விட்டாய்?" என்று கேட்டது.
முள்ளம் பன்றி குட்டி, நடந்ததை கூறியது. உடனே அதன் அம்மா "இதற்குத்தான் நான் முள்ளை எல்லாம் வெட்ட வேண்டாம் என்று கூறினேன்" என்றது.
அப்போது முள்ளம் பன்றி குட்டி, "எனக்கு மறுபடியும் எனது முட்கள் வேண்டும். எப்போது அவை வளரும்?" என்று கேட்டது.
அதன் அம்மா " அவை வளர ஒரு மாதம் ஆகும்"  என்றது.
அதற்கு குட்டி "ஐயோ, அது வரை நான் என்ன செய்வது?" என்று வருத்தப் பட்டது.
அதன் அம்மா "அது வரை விளையாட எங்கும் போக வேண்டாம்.  வீட்டில் பாடம் படித்துக் கொண்டு சும்மா இரு" என்றது.
இப்படியாக ஒரு மாதம் ஓடியது.  அதற்குள் குட்டிக்கு முட்கள் மீண்டும் வளர்ந்து விட்டன.  மறுபடியும் முள்ளம் பன்றி குட்டி  தனது நண்பர்களுடன் விளையாட சென்றது.  இப்போது மற்ற குட்டிகள் அதைப் பார்த்து "மீண்டும் நீ முட்களுடன் வந்து விட்டாயா? நீ எங்களுடன் விளையாடினால் உன் முட்கள் எங்கள் மேல் குத்தும்" என்றன.
மீண்டும் கோபம் கொண்ட முள்ளம் பன்றி குட்டி, "என்ன நீங்கள் எல்லாம் விளையாடுகிறீர்களா? முள் இல்லாமல் வந்தால் கிண்டல் செய்து என்னை கிள்ளுகிறீர்கள்.  முட்களுடன் வந்தால் குத்தும் என்கிறீர்கள். இப்போது என்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்கிறீர்களா?  அல்லது எல்லாரையும் எனது முள்ளால் நன்றாக குத்தி விடட்டுமா? " என்று அதட்டியது.
இதைப் பார்த்து பயந்த மற்ற குட்டிகள் அதை விளையாட்டுக்கு சேர்த்துக் கொண்டன.  இப்போது முள்ளம் பன்றி குட்டி  தனது நண்பர்களுடன் விளையாடி சந்தோசமாக நாட்களை கழித்தது.  --  முற்றும் --

https://www.youtube.com/watch?v=cStw_X0cb4A&t=33s 

No comments:

Post a Comment